Wednesday 31 October 2012

பொறியியல் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு!!


இந்துஸ்தான் காகித கழகம் என்பது மத்திய அரசு நிறுவனமாகும். கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வந்திருக்கிறது. காலியாகவுள்ள 74 பணியிடங்களில் இவர்களுக்கு 47 பணியிடங்களும், எம்.ஏ., எம்.பி.ஏ., வன மேலாண்மை போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு 27 பணியிடங்களும் காத்திருக்கின்றன. வயது வரம்பைப் பொறுத்தவரை 01.08.2012 அன்று 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. 

பயிற்சிக்காலத்தில் 16 ஆயிரத்து 400 ரூபாயும், பணியில் அமர்த்தப்பட்ட பிறகு 16,400 - 40,500 என்ற காலமுறை ஊதியமும் நிர்ணயிக்கப்படும். டிசம்பர் 9, 2012 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். நாடு முழுவதும் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு மையங்களில் தேர்வுகள் நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில பங்கேற்பவர்களுக்கு இரணடாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். 

தற்போது வரும் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பமே ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுக்கு அப்படிதான் உள்ளது. www.hindpaper.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கூடுதலாக, பதிவு செய்தபிறகு விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்து விண்ணப்பக்கட்டண வரைவோலையோடு இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. வரைவோலை HINDUSTAN PAPER CORPORATION LIMITED என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.  

வரைவோலையின் பின்புறம் விண்ணப்ப எண், பெயர், எந்தப்பணிக்கான விண்ணப்பம் மற்றும் பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
பதிவு செய்த விண்ணப்பத்தின் ஒரு நகலை எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்வதற்கு 31.10.2012 கடைசி நாளாகும். அதன் நகல் நிறுவனத்திற்கு சென்றடைய வேண்டிய கடைசி நாள் 08.11.2012 ஆகும். 

முகவரி - Senior Manager(HR & ES), Hindustan Paper Corporation Limited(A Government of India Enterprise), 75-C, Park Street, Kolkata - 700 016. 

--------------------

குறுஞ்செய்திகள்

ஐபிபிஎஸ் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களை Specialist Officers பணிக்காக இந்தியன் ஓவ்ர்சீஸ் வங்கி அழைக்கிறது. என்னென்ன கல்வித்தகுதிகள். ஐபிபிஎஸ்சில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்பது பற்றிய விபரங்களை www.iob.in என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 337 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

------------------
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில்(இஸ்ரோ) எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான விபரங்களை www.isac.gov.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கடைசித்தேதி - 6.11.2012

-------------------
இந்திய ரயில்வே மருத்துவமனைகளில் செவிலியர், மருந்தாளுனர், பரிசோதனை தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 827 பணிகளை நிரப்ப விளம்பரம் வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடைசித்தேதி 12.11.2012 ஆகும். www.rrbchennai.net என்ற இணையதள முகவரியில் கூடுதல் விபரங்கள் உள்ளன.
---------------
கேள்வி-பதில்

கேள்வி - சார், நான் கடந்த ஆண்டு IBPS நடத்திய வங்கி கிளார்க் பணிக்கான தேர்வில் வெற்றியடைந்துள்ளேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் விளம்பரம் வெளியாகியுள்ள நிலையில் அந்தத் தேர்ச்சியை நான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

- ஹேமா, கோவை,

பதில் - அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் வரும் நேர்முகத் தேர்வுகளுக்கு நீங்கள் தகுதியானவர்தான். மேலும் தற்போது வெளியாகியுள்ள விளம்பரத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கும் அவ்வளவு நாட்கள் ஆகிவிடும. இருந்தாலும், வரும் தேர்வுக்கும் நீங்கள் சிறந்த முறையில் தயாராவது நல்லது.

---------------------
காதைத் தீட்டுங்கள்!

தனியார் துறையில் பணிபுரிபவர்களில் 15 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே தங்களின் பணிஓய்வுக்காலத்திற்கான திட்டமிடலை செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பணியிழப்பு, உத்தரவாதமில்லாத நிலை, சம்பள வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளே இதற்குக் காரணமாகும்.

------------------



Monday 15 October 2012

மீண்டும் வங்கி எழுத்துத் தேர்வு!!



19 பொதுத்துறை வங்கி எழுத்தர் பணியிடங்களுக்ககான தேர்வை IBPS என்ற அமைப்பு நடத்தி வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எழுத்துத் தேர்வு நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டில்(நவம்பர்/டிசம்பர்) தேர்வு நடந்தபிறகு, இப்போதுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் இலட்சக்கணக்கான பணியிடங்கள் வரும் மூன்றாண்டுகளுக்குள் நிரப்பப்பட உள்ளன.

ஏற்கனவே இருந்த தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரையில், எழுத்தராகப் பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தற்போது, குறைந்தபட்ச கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என்று மாற்றியுள்ளனர். "எழுத்துத் தேர்வு" என்ற நிலை மாறி "ஆன்லைனில் தேர்வு" என்ற நடைமுறை கொண்டு வரப்படுகிறது.

தேர்வு முறையில், கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது முக்கிய மாற்றமாகும். ஒவ்வொரு பாடத்திலும் தலா 40 என்ற முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது.

பாடங்கள்

1. Reasoning, 
2. English Language, 
3. Numerical Ability, 
4. General Awareness with specific reference to Banking Industry. 
5. Computer Knowledge.

விண்ணப்பங்களைப் பதிவு செய்வது ஆன்லைன் மூலம் மட்டும்தான் என்பது கடந்த முறையே அமலாகிவிட்டது. அதுதான் தற்போதும் உள்ளது. அக்.15 ஆம் தேதி முதல் பதிவுகள் துவங்கியுள்ளன. ஆன்லைன் பதிவுக்குக் கடைசித்தேதி நவம்பர் 5. பதிவு செய்வதற்கான வசதி www.ibps.in என்ற இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வயது 01.10.2012 அன்று 20 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயதைப் பொறுத்தவரையில், பொதுப்பிரிவினருக்கு 28, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 33 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பாக எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அது எந்தெந்த மையங்களில் நடக்கும் என்ற பட்டியலும் அறிவிப்பில் தரப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் தங்களுக்கு அருகிலுள்ள மையத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்து கொள்வதற்கு முன்பாக 18 பக்கங்களைக் கொண்ட அறிவிப்பை ஒருமுறை படித்துக் கொள்ளுதல் அவசியம்.